இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Monday, January 4, 2021

கலி முத்திடுச்சு...!


          அனேகமாக எல்லா பெரிய பிரச்சினைகளுக்கும் சொல்லப்படுகிற பதில்...! 'அந்தக் காலத்துல...' என்று தொடங்கி, தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே சீரழிந்துவிட்டதாகப் புலம்புபவர்கள், தலைமுறை வேறுபாடின்றி காணப்படுகிறார்கள்.

          இளைஞர்கள்கூட, 'அந்தக் காலத்துல எவ்வளவு ஹெல்தியா இருந்தாங்க...' என்று பேசுவதைக் கேட்க முடிகிறது. தாத்தாக்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துப் பிரமிக்கிற அந்த இளைஞர்கள் தாத்தாவுடனோ, தாத்தாவின் அப்பாவுடனோ பிறந்தவர்கள் எத்தனைப் பேர் என்பதைக் கேட்டாலே பாதி உண்மை புரிந்துவிடும். இன்றைக்கு நாற்பதுகளைக் கடந்த யாராக இருந்தாலும், அவர்கள் தாத்தாவுடன் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததாகவும், 3-4 பேர் தவிர மற்றவர்கள் குழந்தையிலேயே இறந்துவிட்டதையும் கேட்டிருப்பார்கள்.

           இன்றைக்கிருக்கிற மருத்துவ வசதிகளும், அறிவியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டிராத அக்காலத்தில், தாத்தா வயது வரை தப்பியவர்கள் மிகுந்த ஆரோக்கியம் பெற்றிருந்தவர்கள் மட்டுமே. சிறிய நோய்களால் தாக்கப்படுபவர்களைக்கூட காப்பாற்ற முடியாமலேயே அவ்வளவு பேரும் இறந்திருப்பார்கள். விடுதலைப் பெற்றபோது, குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 200க்கும் அதிகமாக இருந்ததிலிருந்து, 2015இல் 38ஆகக் குறைந்திருக்கிறது. 1960இல் 41 ஆண்டுகளாக இருநத சராசரி வாழ்நாள், 2015இல் 68ஆக உயர்ந்திருக்கிறது. இவ்வளவும், இன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிர்கள் சத்து இல்லாதவை, எல்லாம் நஞ்சு என்ற விமர்சனங்களுக்கிடையேதான் என்பதுதான் கவனிக்க வேண்டியது.

          சத்து இல்லை என்பது பழைமையிலிருந்து வெளிப்படத் தயாராக இல்லாத மனநிலை மட்டுமே என்பதற்கு இந்தப் புள்ளிவிபரங்களே சான்று. அத்துடன், இன்றுவரை உருவாகியுள்ள தொழில்நுட்பங்களே, கொரோனா வைரசின் வடிவத்தை மட்டுமின்றி, அதன் மரபணுக் கட்டமைப்பையே பார்க்குமளவுக்கு வசதி ஏற்படுத்தி, சிகிச்சைக்கு உதவி, உயிரிழப்புகளைக் குறைத்து, தடுப்பு மருந்துகளை இவ்வளவு விரைவில் உருவாக்குவதையும் சாத்தியமாக்கியிருக்கின்றன என்றால் மிகையல்ல.

          ஆனால், இன்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. புதிதாக எது உருவானாலும், நல்ல, கெட்ட என்ற இரு விளைவுகளும் இருக்கும். நல்ல விளைவுகளுக்காக அந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்படும்போது, பக்க விளைவாக கெட்டவையும் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்களும், அவற்றைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்தபின் உருவாகிவிடும் என்பதுதான், காலம் காலமாகத் தொடரும் நடைமுறையாக உள்ளது. அதற்குள் அவசரப்பட்டு தொழில்நுட்பத்தைக் குற்றவாளிகள் ஆக்குபவர்களை, பழைமை விரும்பிகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

        எளிய தொழில்நுட்பங்களையே கண்டு அஞ்சுபவர்களிடையே, செயற்கை நுண்ணறிவு(ஆர்ட்டிஃபிஷியல் இண்ட்டெலிஜென்ஸ்) அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றால் மிகையல்ல. எந்திரங்களும், மனிதர்களும் போரிடுவதாக ஆங்கிலப் படங்கள் கற்பனை செய்தால், அது உண்மையிலேயே நடக்கும் என்று அஞ்சுபவர்களையும் ஏராளமாகக் காணமுடிகிறது. ஆனால், எந்தத் தொழில்நுட்பமாக இருந்தாலும், உருவாக்குபவரின் நலனுக்காத்தான் என்பதால், உருவாக்கும் மனிதர்களுக்கு நலன் பயப்பதாகவே இருக்கும். 

அதற்கான சில உதாரணங்கள் இங்கே:

           தற்போது ஓட்டுனர் இல்லாத, தானியங்கி கார்களை நோக்கித்தான் ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் சிறப்பான செயல்திறனால், 15 சதவீதம்வரை எரிபொருள் சேமிக்கப்படுவதாகவும், அதனால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நன்மை விளையவிருப்பதாகவும் அருகாமை கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (சிக்னலில் காவலர் இல்லையென்று சிவப்பு எரியும்போதே மனிதர்கள் செல்வதுபோல இவை செல்லாது என்பதால் மற்ற வாகனங்களுக்கும் பாதுகாப்பு அதிகம்!)

         சைட்வாக் லேப்ஸ் என்ற நிறுவனம், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கியுள்ளது. ஒரு நகரின் அனைத்துப் பகுதிகளின் போக்குவரத்தையும் பரிசீலித்து, குறைவான நெருக்கடியுள்ள பாதைகளில் வாகனங்களைத் திருப்பி விடுவதன்மூலம், எரிபொருள் சிக்கனமாவதால், சுற்றுச் சூழல் மாசுபாட்டை இது குறைக்கிறது.

       சீனாவுக்காக ஐபிஎம் உருவாக்கியுள்ள ஸ்மார்ட் ஹொரைஸான் என்ற செயற்கை நுண்ணறிவானது, போக்குவரத்து, கட்டுமானம், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் தரக் கட்டுப்பாடுகளைக் கண்காணிப்பதன்மூலம், பீஜிங் நகரின் காற்று மாசுபாட்டை 35 சதவீதம் குறைத்திருக்கிறது.

         கூகுள் பயன்படுத்தும் டீப்மைண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு, காலநிலைகளைக் கண்காணித்து தேவையான மாற்றங்களைச் செய்வதன்மூலம், கூகுளின் டேட்டா செண்ட்டர்களைக் குளிர்விப்பற்குத் தேவையான எரிசக்தியில் 35 சதவீதத்தை சேமிக்கிறது.

         சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள ஸ்மார்ட் டஸ்ட்பின்ஸ் என்ற குப்பைத் தொட்டிகள், குப்பையின் அளவை, சேகரிக்கும் வாகனத்திற்குத் தெரிவிக்கின்றன. இதன்மூலம் முக்கால் பாகத்திற்கும் அதிகமாகக் குப்பை சேராத குப்பைத் தொட்டிகளுக்கு, குப்பையைச் சேகரிக்க வாகனங்கள் வரவேண்டியதில்லை என்பதால் எரிபொருள் மிச்சமாவதுடன், சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது.

         ட்ரோன்களைப் பயன்படுத்திச் செயல்படும் ஏர்லிட்டிக்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு, விவசாயத்திற்கு உதவுகிறது. காற்றில் உள்ள ஈரப்பதம், கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றின் அளவு, மண்ணின் தன்மை, பயிரின் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கண்காணிப்பதன்மூலம், பயிர் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, அதிக மகசூல் கிடைக்கிறது.

         காலநிலை மாற்றங்களை கவனிக்க உருவாக்கப்படும் கற்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், காற்று மாசுபாட்டை மட்டுமின்றி, எதனால் அதிகரிக்கிறது என்ற ஆய்வையும் செய்து, எவற்றைக் கூட்டலாம், குறைக்கலாம் என்ற அறிவுரைகளையும் தரவிருக்கின்றன.

இவை புதிய தொழில்நுட்பங்களுக்கு சில 'சாம்ப்பிள்கள்' மட்டுமே! அதனால், அடுத்தமுறை, யாராவது தொழில்நுட்பங்களால் தீமை என்று சொல்லும்போது, அப்படியே நம்பாமல், சற்றே சிந்திக்கவும், படிக்கவும் முயற்சிப்போம்! எல்லா தொழில்நுட்பங்களைப் பற்றியும் தகவல் சொல்ல இணையம் எப்போதும் தயாராகவே உள்ளது!


 

No comments:

Post a Comment