இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Thursday, December 31, 2020

வரவேற்கிறோம், ரஜினி சார்!

         சிவாஜிராவ் கெய்க்வாட்....! வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு வந்து, ரஜினிகாந்த் என்ற பெயரில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருப்பவரின் இயற்பெயர்! கர்னாடக மாநிலத்தில் பிறந்த மராட்டியர் என்ற பேதத்தைத் தமிழர்கள் என்றுமே அவரிடம் காட்டியதில்லை. அவருக்கு மட்டுமில்லை, எவருக்குமே தமிழர்கள் பேதம் காட்டியதில்லை என்பதுதான், தமிழகத்தின் சிறப்பு!

      1975இல் தமிழில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 1979க்குள் 50க்கும் அதிமான படங்களில் நடித்து, பொருளும், புகழும் ஈட்டினாலும்கூட, மன அமையின்றி, திரைத்துறையைவிட்டு விலகும் முடிவை ரஜினி எடுத்தார். பாலச்சந்தர் உள்ளிட்டோரின் முயற்சியால் அம்முடிவு மாற்றப்பட்டபின் வெளியான முதல் படமான பில்லா, ரஜினியின் திரைவாழ்க்கையின் இரண்டாவதும், மிக வெற்றிகரமானதுமான அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது. வணிக அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியடைந்த முதல் ரஜினி படமாக அமைந்த பில்லா, தமிழின் உச்ச நட்சத்திரமாக மட்டுமின்றி, தென்னிந்தியாவின் மிகமுக்கிய நடிகராகவும் ரஜினியை உயர்த்தியது. இதில் தொடங்கி, 2007இல் ஆசியாவின் மிகஅதிக ஊதியம் பெறும் நடிகர்களில் இரண்டாவது இடம் என்ற எட்ட முடியாத இடம்வரை அளித்தவை தமிழ்ப் படங்களும், அவற்றை வெற்றிகரமாக்கிய தமிழர்களும்தான்.

        தொண்ணூறுகளில் வெளியான ரஜினி படங்கள், ரசிகர் மன்றத்தினர் பார்த்தாலே ஆறு வாரங்களுக்கு அரங்கு நிறைந்துவிடும்(ஹவுஸ்ஃபுல்) என்ற நிலைக்கு வளர்ந்திருந்தார் ரஜினி. 42 நாட்கள் ரசிகர்களால் மட்டுமே அரங்கு நிறையும்போது, 50 நாட்களைக் கடப்பதில் சிரமம் எதுவும் இல்லையென்பதால், எல்லாப் படங்களுமே 50 நாட்களைக் கடக்கும் என்ற அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அதைத்தான் அவரது செல்வாக்கு என்று மற்றவர்கள் அவரை நம்பச் செய்தனர். ஆம்! செல்வாக்குதான்! ஆனால், அது நடிகராக மட்டுமே!

     வெற்றிகரமான நடிகர் என்ற நிலையிலிருந்து, முதலமைச்சராகி, இறக்கும்வரை அப்பதவியில் தொடர்ந்த எம்ஜிஆரின் வாழ்க்கைதான், திரைத்துறையைச் சார்ந்த பலருக்கும், முதலமைச்சர் கனவை உருவாக்கக் கூடியதாக இன்றும் திகழ்கிறது. யார் யாரோ ஆசைப்படும்போது, தமிழ்த் திரையுலகில் வேறு எவரும் எட்ட முடியாத உச்சத்தைத் தொட்டவரான ரஜினியால் முடியாதா என்று சிலர் எண்ணினர். எண்ணியவர்கள் ரஜினியின் நலம் விரும்பிகள் அல்லர். ரஜினி முதலமைச்சரானால், தங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்று தங்களின் நலத்தை விரும்பியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள ரஜினியால் முடியவில்லை.

       ஒரு தொழிற்சங்கம் இருக்கிறது வைத்துக்கொள்வோம்... தொழிற்சங்கம் என்றால், கழகங்களின் தொழிலாளர் அணிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது... சிஐடியு, ஏஐடியுசி போன்வற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றின் உறுப்பினர்கள்தான் சிபிஎம், சிபிஐ கட்சிகளின் உறுப்பினர்களாக இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாடு கிடையாது. தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டிருந்தாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாடு வேறாக இருக்கும். தொழிலாளராக அவர்களின் வாழ்க்கைக்கே கேடு விளைவிக்கும் ஆட்சிக்கு எதிராகப் போராடினாலும், தங்களுக்குப் பிடித்த கட்சி என்ற அடிப்படையில் ஆளும் அதே கட்சிக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள். அதைப் போலத்தான், ரஜினியின் ரசிகர்களும். ரஜினி என்ற நடிகருக்குத்தான் ரசிகர்களே தவிர, அவர்களுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு இருக்கும். இந்த உண்மையைத்தான் ரஜினி உணரவில்லை.

         எம்ஜிஆர் மட்டும் முதல்வராக எப்படி முடிந்தது என்பதுதான் உடனடியாகச் சுட்டப்படும் உதாரணம். உண்மையில், எம்ஜிஆருக்கு ஓர் அரசியல் நிலைப்பாடு இருந்தது. திமுக உருவானபோது, அதன் உறுப்பினராகி, கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்து என்று அவருடைய அரசியல் வாழ்க்கை எப்போதோ தொடங்கிவிட்டது. தன் திரைப்படங்களிலும்கூட தனது அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து பேசிவந்த நிலையில், வெறும் ரசிகர்களாக இன்றி, கொள்கைக்காக அவர் படங்களை வெற்றியடையச் செய்யும் அளவுக்கு மக்களின் செல்வாக்கு அவருக்கு உருவாகியிருந்தது. தான் நம்பிய கட்சி, தன் நிலைப்பாட்டுக்கு மாறாகச் செயல்படுகிறது என்று அவர் வெளியே வந்தபோது, ஏற்கெனவே அவருடைய அரசியல் நிலைப்பாட்டைப் பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருந்தனர் என்பதே அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. பெரியார் உருவாக்கியிருந்த விழிப்புணர்வு, அதனால் தமிழர்களின், தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாகியிருந்த திமுக, அது இளைஞர்களிடையே ஏற்படுத்தியிருந்த எழுச்சி ஆகியவற்றின் அறுவடையே எம்ஜிஆரின் வெற்றி. இந்த வேறுபாடு புரியாமல், திரையில் நடித்த வேடங்களுக்காக மட்டும் மக்கள் எம்ஜிஆரைத் தேர்ந்தெடுத்ததாக நம்பியவர்கள்தான், ரஜினியைக் குழப்பினார்கள். குழப்பமடையாமலிருக்கும் அளவுக்குத் தெளிவான புரிதல் ரஜினிக்கு இல்லாமற்போனது.

        அருவருக்கும் அளவுக்கு நடைபெற்ற 1991-96 ஜெயலலிதா ஆட்சி, அதுவரை தமிழத்தில் நடைபெற்ற அரசியலே தவறோ என்ற எண்ணத்தை மக்களிடையே தோற்றுவித்திருந்தது. அப்படியான நிலையில்தான், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தூண்டப்பட்டார். அதற்கு அவர் தயாராக இல்லையென்றாலும், ஆசை யாரை விட்டது என்ற நிலையிலும் இருந்தார். ஏற்கெனவே எம்ஜிஆராலும், பின்னர் ஜெயலலிதாவாலும்கூட அவமானப்படுத்தப்பட்ட உணர்வுடன் இருந்ததால், 'ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்ற புகழ்பெற்ற சொற்களை உதிர்த்தார் ரஜினி. எப்படியானாலும் தோற்றுவிடுமளவுக்கு ஜெயலலிதா ஆட்சி புரிந்திருந்த நிலையில், ரஜினியின் பேச்சுதான் ஜெயலலிதாவைத் தோற்கடித்தது என்று ரஜினிக்குச் சொல்லப்பட்டது. புகழுக்கு மயங்காதார் உண்டா? ஏற்கெனவே, நடிப்பு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையிலிருந்த ரஜினி, எளிதாக ஏமாந்தார். அடுத்தடுத்து அவர் பேசியவற்றுக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம், மக்கள் செல்வாக்கு என்று அவருக்குச் சொல்லப்பட்டாலும், மண்குதிரையை நம்பி ரஜினி கடைசிவரை ஆற்றில் இறங்காதது அவரது மிகச்சிறந்த நிலைப்பாடு என்பதை மறுப்பதற்கில்லை.

        அவரது அரசியல் பேச்சுகள் தொடங்கி கால் நூற்றாண்டுத் தயக்கத்திற்குப்பின், அரசியல் வேண்டாம் என்பதான நிலையை அறிவிக்க அவர் முயற்சித்தார். சிறுநீரக மாற்று செய்திருப்பதைக் குறிப்பிட்டு, அரசியலுக்கு வந்தபின் தனக்கு ஏதாவது ஆனால் ரசிகர்கள் பாவமல்லவா என்றெல்லாம் பேசிவிட்ட ரஜினி, மீண்டும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்க, அவருக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிகள்தான் காரணம் என்பது உலகறிந்த ரகசியமாக அமைந்தது. இன்றுவரை தமிழத்தை ஆண்டுகொண்டிருந்தாலும்கூட, அதிமுக அரசின் அமைச்சர்கள் உட்பட அனைவருமே, மத்தியில் ஆளும் பாஜகவின் வெளிப்படையான ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் சிபிஅய், வருமான வரித்துறை உள்ளிட்டவற்றிற்கு அஞ்சித்தான் கட்டுப்படுகின்றார்கள் என்பதை அவர்களே மறுப்பதில்லை. சொல்லப்போனால், ஒரு ரெய்ட் வந்தால் சரியாகிவிடும் என்று பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே மிரட்டியதுகூட தமிழகத்தில் நடந்தது.

          அத்தகைய மிரட்டல்களுக்கு ரஜினி ஏன் பணியவேண்டும்? வருமான வரிக்காக வட்டித் தொழில் செய்ததாகக் கூறியது தொடங்கி, அவர் அஞ்சவேண்டிய பல குறைகள் அவரிடம் இருந்தன. திரைத்துறையினர் போன்ற பெரும் வருவாய் ஈட்டுபவர்கள் வரி நிலுவை வைப்பது என்பது வழக்கமாக நிகழக்கூடியதுதான். இதை நடிகவேள் எம்.ஆர்.ராதா பலமுறை சுட்டிக்காட்டி, தானே நிலுவை வைத்திருப்பதாகப் பொதுவெளியில் பேசவும் செய்திருக்கிறார். அதைப்போலவே, தனிப்பட்ட வரவு செலவுகளில் வாடகை நிலுவை போன்றவைகளும் யாருமே செய்யாத குற்றங்களல்ல. ஆனால், 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்' என்ற கூற்றைப் போல, ஆட்சியைக் கைப்பற்ற விரும்புபவர் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இவை அனைத்தும் பொதுவெளிக்கு வந்து சந்தி சிரித்தன. அதாவது, ரஜினி எதற்காகவெல்லாம் அஞ்சினாரோ, அபராதங்களுடன் முடிந்திருக்க வேண்டிய அவை, அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. அவற்றால் ஏற்பட்ட தாங்க முடியாத மன உளைச்சலுக்குப் பின்னரே, வேண்டாம் என்ற தனது முடிவில் உறுதியாக நிற்கும் துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

         'பெட்டர் லேட், தேன் நெவர்'! எவ்வளவு தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான முடிவு! வரவேற்கிறோம், ரஜினி சார்! வயது பேதமின்றி அனைவரும் ரசிக்கும் கலைஞராக இருந்தவர் நீங்கள்! ஆனால், தூத்துக்குடிக்குச் சென்று வந்து, போராடிய மக்கள் குறித்து உதிர்த்த சொற்கள், சக மனிதர் என்ற இடத்தில்கூட வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வேதனையை உருவாக்கின. சிறு வயதில் உங்களை ரசித்த மனநிலையை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, வெறுப்புறும் அளவுக்கு இடையில் நிகழ்ந்தவற்றை மறக்க விரும்புகிறோம். 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைப் போல, உங்களுக்குத் தெரியாத அரசியல் துறையைப் பற்றி, மீண்டும் ஏதாவது உளறி, உங்கள் மரியாதையை மேலும் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்ற வேண்டுகோளுடன், எஞ்சிய உங்கள் வாழ்நாள் நலமாக அமைய வாழ்த்துகிறோம்!

Monday, December 28, 2020

நிர்வாணப் படங்கள் அசிங்கமா?


             தாய்லாந்து அரசரின் காதலியின் நிர்வாணப் படங்கள் சில நாட்களுக்குமுன் வெளியாகின. மூன்று முறை திருமணம் செய்து, மூவரையுமே விவாகரத்தும் செய்துவிட்ட அரசர், தற்போது காதலியாக உள்ளவருக்கு பட்டத்தரசிக்கு இணையான பதவிகளை வெளிப்படையாக அளித்திருப்பது, அரச குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுகள்தான் இவ்வாறு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை முக்கியமில்லை. ஆனால், ஒருவரின் நிர்வாணப் படத்தை வெளியிடுவது என்பதைப் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது.

               விலங்குகள் உடை அணிவதில்லை. ஆனால், உடலின் சில பகுதிகளைக் கட்டாயம் மறைக்கும்படி உடை அணிவது என்பதுதான் விலங்குகளையும், மனிதர்களையும் வேறுபடுத்துகிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்ட மனிதர்கள், நல்ல மனநிலையிலிருந்தால், பிறர்முன் ஆடைகளின்றி நடமாடாமல் இருப்பது குறைந்தபட்ச நாகரிமாக எல்லா சமூகங்களிலுமே கருதப்படுகிறது. தான் உடையுடன் இருப்பதை ஒருவர் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது தவறாகவும், அநாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால், பிறர் இல்லாத தனிமையிலும், தன் துணையுடன் மட்டும் தனிமையில் இருக்கும்போதும், உடையின்றியோ அல்லது  அரைகுறை உடையுடனோ இருப்பது என்பது தனிப்பட்ட உரிமை. பிறருக்குக் கேடு விளைவிக்காத தனிப்பட்ட நடவடிக்கை என்பது சமூகத்தோடு நேரடித் தொடர்பில்லாத நடவடிக்கையே. அதை பிறர் படம் எடுத்து பரப்புவது என்பது அவருடைய தவறு இல்லை. படமெடுத்தவர், பரப்பியவர் ஆகியோரின் நாகரிகக் குறைவையே அது காட்டுவதாக நான் கருதுகிறேன்.

               ஒருவரை நேரடியாக, பிரச்சினைக்குரிய செய்தியின் அடிப்படையில் எதிர்கொள்ள முடியாதபோது, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது என்பது, தரம் தாழந்தவர்களின் நடவடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக, தொடர்புடையவர் பெண் என்றால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து, தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்தத் தரம் தாழ்ந்த விமர்சனங்களுடன், ரகசிய கேமரா உள்ளிட்டவற்றின்மூலம் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகள், நிர்வாணம் ஆகியவற்றைப் படமெடுத்துப் பரப்புவதை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இக்காலத்தில் ஏதுவாக்கியிருக்கின்றன. மேற்குறிப்பட்ட தாய்லாந்து அரச குடும்ப படங்கள்கூட எஸ்டி கார்டாகத்தான், அதாவது டிஜிட்டல் வடிவத்தில்தான் பகிரப்பட்டுள்ளன என்பது, இந்நடவடிக்கையில் தற்காலத் தொழில்நுட்பத்தின் உதவியையே காட்டுகிறது.

                உடனே தொழில்நுட்பங்கள் தவறு என்று வாதிடுவது முட்டாள்தனமானது. இத்தகைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிதான், கொரோனா வைரசின் வடிவத்தைக்கூட எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் தெளிவாகப் பார்த்து, எப்படி மனித உடலைப் பற்றிக்கொள்கிறது என்பதுவரை ஆராய்ந்து, எதிர்கொள்ள உதவி, அதன்மூலம் கடந்த காலக் கொள்ளை நோய்களைப் போன்ற அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுவிடாமல் தடுத்திருக்கிறது.

               கவனிக்க வேண்டியது என்னவென்றால் மானம்-அவமானம் என்பதன் வரையறையில் ஏற்படவேண்டிய மாற்றமே. நம் படுக்கையறையையோ, குளியலறையையோ யாருமே பார்க்க முடியாமலிருந்த காலத்தில் என்ன வரையறை இருந்ததோ, அதையே, சட்டைப் பொத்தானைவிடச் சிறிய கேமராவைக்கொண்டு எந்த இடத்தையும் பார்த்துவிடக்கூடிய இக்காலத்தில் பின்பற்றுவது என்பது, எவருடையை நிம்மதியையும் எளிதில் பறித்துவிடும். நம் வரையில் நம் நாகரிகத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது மட்டுமே இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சாத்தியமானது. நமக்குத் தெரியாமல் நம் தனிப்பட்ட வாழ்க்கையை இன்னொருவர் படமெடுத்து, பகிரும்போது, அதில் நம் தவறு இல்லையென்பதை யாரும் மறுக்க முடியாது.

               அதெல்லாம் சரி... அசிங்கம் அசிங்கம்தானே? அசிங்கம் என்றால் என்ன? மற்றவர்கள் சரியென்று ஏற்காத, நாகரிகமற்ற ஒன்றைச் செய்வதுதான் அசிங்கம். இதைத்தான் முதலிலிருந்து விளக்கிக் கொண்டிருக்கிறேன். பொது இடத்தில் நீங்களாக உடையை அவிழ்த்தால்தான் அது அசிங்கம். யாராவது பார்த்து விடுவார்கள் என்று படுக்கையறையிலும், குளியலறையிலும் உடையை அவிழ்க்காமலே இருக்க முடியுமா? உங்கள் படுக்கையறையை வேவு பார்த்தவர்தான் அசிங்கமானவரே தவிர, அங்கு இயல்பாக இருந்த நீங்கள் அல்ல.

                இதிலும்கூட பெண்களின் நிர்வாணம் மிகவும் அவமானத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் மனிதர்கள் எனும்போது, எப்படி ஆணுடைய நிர்வாணத்திற்கு ஒன்றும், பெண்ணுடைய நிர்வாணத்திற்கு வேறாகவும் அவமானம் மாறுபட முடியும்? பொதுவாகவே ஆண் உள்ளாடை தெரியும்படி வேட்டி கட்டலாம். பெண்ணின் உள்ளாடை தவறிப்போய்த் தெரிந்தாலும் அது அசிங்கம் என்பதான மனநிலை இருக்கிறது அல்லவா, அதன் தொடர்ச்சிதான் இதுவும்!

               பிரச்சினை என்னவென்றால், பெண்ணை, ஆணைப்போன்றே ஒரு மனிதர் என்ற பார்வையுடன் பார்ப்பதில்லை என்பதுதான். மனிதனைத்தவிர வேறு எந்த மிருகமும், இனப்பெருக்கத்துக்காக இணைசேரும் நேரம் தவிர, பிற நேரங்களில், உடன் இருப்பது ஆணா பெண்ணா என்று பார்ப்பதேயில்லை என்று நான் அடிக்கடி கூறுவேன். ஆனால், மனிதன் மட்டுமே பெண்ணை, பெண்ணின் உடலாக மட்டுமே பார்க்கிறான். அதன் விளைவே, பெண்ணின் நிர்வாணம் அதிக அவமானத்துக்குரியது என்ற கருத்தாக்கம். அதுதான், சில ஆண்டுகளுக்குமுன் நிர்வாண உடலுடன் மார்ஃபிங் மூலம் தன் முகம் பொருத்தப்பட்டதற்காகவே சேலத்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்குக் கொண்டு சென்றது. அப்படியான படம் வெளியானதில் அந்த மாணவியின் தவறு ஏதாவது இருக்கிறதா? ஆனாலும், அவள் அசிங்கம் என்பது என்ன நியாயம்? பகுத்தறிவுள்ள எவராவது அதை ஏற்க முடியுமா?

               அப்படியானால் என்னதான் செய்வது? பொதுவாக, முன்பெல்லாம் கற்பழிப்பு என்ற சொல் புழக்கத்திலிருந்தபோது, 'என்ன அழிந்தது என்று காட்ட முடியுமா?', அதில் தொடர்புடைய இருவரில் ஒருவருக்கு மட்டும் ஒன்று(கற்பு) எப்படி அழிய முடியும்?' என்று நான் கேட்பேன். அப்படித்தான், ஒரு பெண்ணின் நிர்வாணப் படம் வெளியானதால் அந்தப் பெண்ணிற்கு என்ன குறைந்துவிடும்? ஒரு சமூகமாக நானும், நீங்களும் பார்க்கிற அசிங்கப்படுத்தும் பார்வையைத் தவிர வேறு எந்தக் குறையும் அந்தப் பெண்ணிற்கு உண்மையில் ஏற்படப் போவதில்லை. ஆனால், மானம் போய்விட்டது என்று அவளை நம்பச் செய்து, தற்கொலை வரை இட்டுச் செல்கிற நிலையிலிருப்பது, நாகரிகம் அடைந்த சமூகமா?

               'என் உடலை மூடும்படி உடை அணிகிற நான் நாகரிகமானவள்தான், அந்த உடையை நான் அகற்றும் தனிப்பட்ட இடங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அதைப் பார்க்கிறவரும், படமெடுக்கிறவரும், அதைப் பரப்புபவரும்தான் நாகரிகமற்றவர்கள், அப்படியான நாகரிகமற்றவர்களுக்காக நான் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை', என்ற உணர்வுதான் சரியான நாகரிக வளர்ச்சியாக இருக்க முடியும். அதையும் தாண்டி, அசிங்கமான பார்வைகளை யாராவது பார்த்தாலும், 'நீங்கள் அப்படங்களைப் பார்த்ததால் நான் எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை, ஆனால், என் தனிப்பட்ட இடங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்ததில் நீங்கள்தான் திருட்டுத்தனம் செய்பவர்களாக ஆகியிருக்கிறீர்கள், இது நீங்கள் கவலைப்படவேண்டிய செய்தியே தவிர, எனக்குக் கவலைப்பட ஏதுமில்லை', என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, நாயைப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டுக் கடந்துபோய், தன் பணிகளில் கவனம் செலுத்துவதுதான் தீர்வு. இந்தத் தன்னம்பிக்கையை நாம் சார்ந்த பெண்களுக்கு ஊட்டவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

               தாய்லாந்து செய்தியிலும்கூட, அரசருக்கு மனைவி இல்லை. இவர் காதலி என்பதை அவர் மறைக்கவில்லை. அதனால் அவர் நாகரிகமானவர்தான். ஆனால், அவர்களுடைய தனிப்பட்ட இடங்களில் திருட்டுத்தனமாக நுழைந்து, படமெடுத்து, பகிர்ந்தவர்கள்தான் அசிங்கத்துக்கு உரியவர்கள். அரசுரிமை மாதிரியான சிக்கல்கள் இருந்தால், அவற்றை அந்தத் தளத்தில் நேர்மையுடன் சந்திக்க வேண்டுமே தவிர, பெண்ணின் நிர்வாண உடலை ஆயுதமாக்குபவர்கள் எவரும் நாகரிகமடைந்த மனிதர்களாக இருக்கவே முடியாது என்பது அறிவுக்கடலின் கருத்து!