நாடுகளை முடியரசர்கள் ஆண்ட காலத்தில், அரசர் எடுப்பதுதான் முடிவு. அமைச்சர்கள், அவையோர் உள்ளிட்டோரை அரசர் கலந்தாலோசிப்பதையும், ஆலோசிக்காமல் தவிர்ப்பதையும் யாருமே கேள்வி கேட்க முடியாது. ஆலோசித்தாலும், அனுபவமுடையோரின் கருத்தையோ, பெரும்பான்மையினரின் கருத்தையோ அரசர் ஏற்கவேண்டுமென்ற அவசியமில்லை. சொல்லப்பட்ட ஆலோசனைகளுக்கு நேர்மாறாகக்கூட அரசரின் முடிவு இருக்கலாம்.
அதனை அரசர் மட்டுமே தனிப்பட்டு எடுப்பதால், அக்காலத்திய அரசு(அரசரின்!) உத்தரவுகள், 'நான் உத்தரவிடுகிறேன்...', 'நான் அறிவிக்கிறேன்...' என்பனவற்றைப் போன்ற, செய்வினை வாக்கியங்களாகவே இருக்கும்.
ஆனால், மக்களாட்சி என்ற அமைப்பு உருவானபின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை எடுப்பதுதான் முடிவு. மக்களாட்சி நடைபெறுகிற எல்லா நாடுகளிலும், பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அரசுத் தலைவர் எவரும், நாடாளுமன்றம் போன்ற ஆளும் அவையை கலந்தாலோசிக்காமலோ, மீறியோ தனிப்பட்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.
அதனாலேயே, இக்காலத்திய அரசு உத்தரவுகள் அனைத்தும் 'உத்தரவிடப்படுகிறது...', 'முடிவெடுக்கப்பட்டுள்ளது...' என்பதான செயப்பாட்டுவினை வாக்கியங்களாகவே இருக்கும். உண்மையில், அனைத்து குடிமக்களையும் மனிதர்களாக மதிக்கும் நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடே, தான் மட்டும் உயர்ந்தவர் இல்லை என்பதை ஏற்று, பொதுவான முடிவாக வெளியிடுதல்.
இந்த மரபு, தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபின் மாறியது. யாரையும் ஆலோசிக்காமல், யாரையும் மதிக்காமல் முடிவுகளை அவர் உண்மையிலேயே தனிப்பட்டுதான் எடுத்தார் என்றாலும்கூட, அரசுக்கு இருக்கிற நடைமுறைகளை மாற்றியது அருவருக்கத்தக்கதாகத்தான் இருந்தது. இந்தச் சமூகத்தில் பெண்கள் சந்திக்கிற அடக்குமுறைகளை அனைவரும் அறிந்திருக்கிற நிலையில், திரைத்துறையில் பெண்கள் சந்திக்கிற நெருக்கடிகள் அதிகம் என்பதும் புரிந்தே இருக்கிறது. அப்படியான மோசமான அனுபவங்களினால், ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகக் கருதிக்கொண்டு ஜெயலலிதா இப்படியான தவறான நடைமுறையைக் கையாண்டார் என்றுதான் கருத வேண்டியிருந்தது. அதாவது, அவர் வாழ்வில் சந்தித்த கொடுமைகளுக்கான எதிர்வினை என்று கூறுமளவுக்கு சிறிய நியாயமாவது(ஏற்க முடியாவிட்டாலும்) அவர் பக்கம் இருந்தது.
No comments:
Post a Comment