இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Wednesday, January 13, 2021

பொங்கல் வாழ்த்துகள்!

கால் நூற்றாண்டுக்குமுன் வரை எழுத்தாளராவது அவ்வளவு சுலமல்ல...
யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால், வெளியிடுவது பதிப்பகங்கள் ஏற்றால்தான் நடக்கும். அதனால், வெளியானால்தானே எழுத்தாளர்?

இதனை, வலைப்பூக்கள்() மாற்றியமைத்தன. அப்போதுகூட, ஒரு செய்தியை சிறிய கட்டுரையாகவாவது எழுதித்தான் பதிப்பித்துக் கொண்டிருந்தார்கள்..

அதன்பின் மைக்ரோ ப்ளாக்கிங் என்ற வகையில் ட்விட்டர் போன்றவை வந்தன. மொபைல் சேவையின் குறுஞ்சேவை வசதியைப் பயன்படுத்தியதால் 2006இல் வந்த ட்விட்டர், 2004 உருவாகியிருந்த முகநூலைவிட அதிகம் பரவியிருந்தது. ஆண்ட்ராய்ட் மொபைல்களின் வரவுக்குப் பின்னர், முகநூல் அடைந்த வளர்ச்சியும், 140 எழுத்துகளுக்குட்பட்ட குறுஞ்செய்தியை இணையம் இல்லாதவர்களுக்கும் வழங்கும் சேவை என்ற இடத்தைக் கைவிட்டு ட்விட்டர் அடைந்த புதிய வடிவமும், மைக்ரோ ப்ளாக்கிங், எழுதுதல் போன்ற எதைப் பற்றியும் அறிந்திருக்கவேண்டிய அவசியமே இன்றி, எல்லோரையும் எழுத்தாளராக்கிவிட்டன.



பதிப்பாளர்கள் மட்டுமே பதிப்பித்தவரை, அவர்களிடமே பிழை சரிபார்ப்பவர் இருப்பார், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியவற்றுடன், பதிப்பாளரே கருத்துப் பிழைகள், தரம் ஆகியவற்றைப் பரிசீலித்தபின்தான் வெளியிட ஏற்பார் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமற்போயின. யார் எழுதினாலும் யாருடைய மதிப்பீடும், உதவியும் தேவையின்றி அவர்களே வெளியிட்டுக்கொள்ளலாம் என்ற நிலை, அவர்களேகூட சரிபார்க்காமல் வெளியிடுகிற அவசரத்தையும்கூட உருவாக்கிவிட்டது. அதனால்தான், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் - பதிவுகளில் இலக்கணப் பிழைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

பொருட் பிழைகள் என்று நான் கருதுவதில்லை. ஏனென்றால் அவரவர்க்குச் சரி என்று பட்டதைத்தானே எழுதிகிறார்கள்? நம் பார்வையில் தவறு என்பதற்காக அதைப் பொருட்பிழை என்று அழைப்பது நியாயமாகாது.

ஆனால்....

மிகமோசமான, நாகரிகமற்ற சொற்களின் பயன்பாடு.... குறிப்பாக, பாஜக, மோடி ஆகியோரை விமர்சிப்பவர்களுக்கு, அவர்களை ஆதரிப்பவர்கள் எழுதும் பதில்கள் எப்போதுமே, எழுதிய மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையைம், ஒழுக்கத்தையும், நாக்கூசும் சொற்களால் விமர்சிப்பதாகவே இருக்கின்றன.

என் கருத்து என்னவென்றால், நம்மை ஒரு 'மனிதர்' திட்டுகிறார் என்றால், அதற்கு அவர் பயன்படுத்தும் சொற்கள், அவரது தரத்தைத்தான் காட்டுமே நம் தரத்தை அல்ல... நாமே ஒருவரைத் திட்டவேண்டி வந்தால்கூட, நமக்குத் தெரிந்த சொற்களைத்தானே பயன்படுத்துவோம்? அதனால், நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்லித் திட்டினார்கள் என்பதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை.

அடுத்து... நாய் குரைக்கிறது. நாம் திருப்பிக் குரைப்போமா? திருப்பிக் குரைத்தால் நாமும் நாயாகிவிடுவோம். நாய் குரைக்கும்போது நமக்கு அதன்மீது பெரிதாகக் கோபம் வருவதி;ல்லையே, ஏன்? ஏனென்றால் அது விலங்கு, நமக்குச் சமமமானதல்ல, நம்மைவிடத் தாழ்ந்தது என்று நமக்குப் புரிந்திருக்கிறது. அசிங்கமான சொற்களைப் பதிவிடுபவர்கள் அத் தரத்தவர்கள்தான்!

அப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டால், அவர்களுக்கு பதிலளிப்பதை – பதிலுக்குக் குரைப்பதை – நாமும் நிறுத்திவிடுவோம். மாறாக, நம்மில் பலர், அவர்களுக்கு அவர்களின் மொழியில் - அதாவது அசிங்கமான சொற்களால் பதிலளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதாவது, நாமும் குரைக்கத் தொடங்கிவிடுகிறோம். பதிலுக்குக் குரைத்தால், குரைப்பதை நாய் நிறுத்துமா? அதிகமாகத்தானே குரைக்கும்? அதனால்தான், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், அசிங்கமான சொற்களாலான பதிவுகளை ஏராளமாகக் காண முடிகிறது.

மாற்றாக....
1.    பதில் அளிக்காமல் அத்தகையோரை கண்டுகொள்ளாம் விடலாம்
2.    அத்தகைய பின்னூட்டங்களை நீக்கிவிடலாம்
3.    மோசமான மொழி என்று முகநூலில் புகார் செய்து அந்த பதிவை, பின்னூட்டத்தை நீக்கலாம்
4.    தொடர்ந்து மோசமான மொழி உள்ளிட்ட பதிவுகளைச் செய்பவர்களை முகநூல் முடக்கிவிடுகிறது. அதற்குத் தொடர்ந்து புகாரளிக்கலாம்.
இவற்றால்...
1.    நம் பதிவுகளில் உணர்ச்சிவசப்பட்டு தரம்தாழ்ந்த மொழி இடம்பெறாது
2.    உணர்ச்சிவசப்படுத்தும் பதில்களால்-பதிவுகளால் திசைதிரும்புவது தவிர்க்கப்பட்டு,  சொல்லவேண்டிய செய்திகளை தவறாமல் சொல்லலாம்.
3.    சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருக்கும் அசிங்கமான தமிழை ஒழிக்கலாம்...

நமக்காக, நாம் பேச வேண்டிய அரசியல்-பொருளாதார-சமூக பிரச்சினைகளிலிருந்து திசை திரும்பாலிருப்பதற்காக, நம் தமிழின் தரத்தைக் காப்பதற்காக இவற்றைச் செய்வோம் என்று தமிழரின் புத்தாண்டான தைத்திருநாளிலில் உறுதியேற்போம் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்!


வாழ்த்துகளுடன்,
அறிவுக்கடல்


No comments:

Post a Comment