இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Monday, December 28, 2020

நிர்வாணப் படங்கள் அசிங்கமா?


             தாய்லாந்து அரசரின் காதலியின் நிர்வாணப் படங்கள் சில நாட்களுக்குமுன் வெளியாகின. மூன்று முறை திருமணம் செய்து, மூவரையுமே விவாகரத்தும் செய்துவிட்ட அரசர், தற்போது காதலியாக உள்ளவருக்கு பட்டத்தரசிக்கு இணையான பதவிகளை வெளிப்படையாக அளித்திருப்பது, அரச குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுகள்தான் இவ்வாறு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை முக்கியமில்லை. ஆனால், ஒருவரின் நிர்வாணப் படத்தை வெளியிடுவது என்பதைப் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது.

               விலங்குகள் உடை அணிவதில்லை. ஆனால், உடலின் சில பகுதிகளைக் கட்டாயம் மறைக்கும்படி உடை அணிவது என்பதுதான் விலங்குகளையும், மனிதர்களையும் வேறுபடுத்துகிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்ட மனிதர்கள், நல்ல மனநிலையிலிருந்தால், பிறர்முன் ஆடைகளின்றி நடமாடாமல் இருப்பது குறைந்தபட்ச நாகரிமாக எல்லா சமூகங்களிலுமே கருதப்படுகிறது. தான் உடையுடன் இருப்பதை ஒருவர் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது தவறாகவும், அநாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால், பிறர் இல்லாத தனிமையிலும், தன் துணையுடன் மட்டும் தனிமையில் இருக்கும்போதும், உடையின்றியோ அல்லது  அரைகுறை உடையுடனோ இருப்பது என்பது தனிப்பட்ட உரிமை. பிறருக்குக் கேடு விளைவிக்காத தனிப்பட்ட நடவடிக்கை என்பது சமூகத்தோடு நேரடித் தொடர்பில்லாத நடவடிக்கையே. அதை பிறர் படம் எடுத்து பரப்புவது என்பது அவருடைய தவறு இல்லை. படமெடுத்தவர், பரப்பியவர் ஆகியோரின் நாகரிகக் குறைவையே அது காட்டுவதாக நான் கருதுகிறேன்.

               ஒருவரை நேரடியாக, பிரச்சினைக்குரிய செய்தியின் அடிப்படையில் எதிர்கொள்ள முடியாதபோது, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது என்பது, தரம் தாழந்தவர்களின் நடவடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக, தொடர்புடையவர் பெண் என்றால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து, தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்தத் தரம் தாழ்ந்த விமர்சனங்களுடன், ரகசிய கேமரா உள்ளிட்டவற்றின்மூலம் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகள், நிர்வாணம் ஆகியவற்றைப் படமெடுத்துப் பரப்புவதை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இக்காலத்தில் ஏதுவாக்கியிருக்கின்றன. மேற்குறிப்பட்ட தாய்லாந்து அரச குடும்ப படங்கள்கூட எஸ்டி கார்டாகத்தான், அதாவது டிஜிட்டல் வடிவத்தில்தான் பகிரப்பட்டுள்ளன என்பது, இந்நடவடிக்கையில் தற்காலத் தொழில்நுட்பத்தின் உதவியையே காட்டுகிறது.

                உடனே தொழில்நுட்பங்கள் தவறு என்று வாதிடுவது முட்டாள்தனமானது. இத்தகைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிதான், கொரோனா வைரசின் வடிவத்தைக்கூட எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் தெளிவாகப் பார்த்து, எப்படி மனித உடலைப் பற்றிக்கொள்கிறது என்பதுவரை ஆராய்ந்து, எதிர்கொள்ள உதவி, அதன்மூலம் கடந்த காலக் கொள்ளை நோய்களைப் போன்ற அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுவிடாமல் தடுத்திருக்கிறது.

               கவனிக்க வேண்டியது என்னவென்றால் மானம்-அவமானம் என்பதன் வரையறையில் ஏற்படவேண்டிய மாற்றமே. நம் படுக்கையறையையோ, குளியலறையையோ யாருமே பார்க்க முடியாமலிருந்த காலத்தில் என்ன வரையறை இருந்ததோ, அதையே, சட்டைப் பொத்தானைவிடச் சிறிய கேமராவைக்கொண்டு எந்த இடத்தையும் பார்த்துவிடக்கூடிய இக்காலத்தில் பின்பற்றுவது என்பது, எவருடையை நிம்மதியையும் எளிதில் பறித்துவிடும். நம் வரையில் நம் நாகரிகத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது மட்டுமே இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சாத்தியமானது. நமக்குத் தெரியாமல் நம் தனிப்பட்ட வாழ்க்கையை இன்னொருவர் படமெடுத்து, பகிரும்போது, அதில் நம் தவறு இல்லையென்பதை யாரும் மறுக்க முடியாது.

               அதெல்லாம் சரி... அசிங்கம் அசிங்கம்தானே? அசிங்கம் என்றால் என்ன? மற்றவர்கள் சரியென்று ஏற்காத, நாகரிகமற்ற ஒன்றைச் செய்வதுதான் அசிங்கம். இதைத்தான் முதலிலிருந்து விளக்கிக் கொண்டிருக்கிறேன். பொது இடத்தில் நீங்களாக உடையை அவிழ்த்தால்தான் அது அசிங்கம். யாராவது பார்த்து விடுவார்கள் என்று படுக்கையறையிலும், குளியலறையிலும் உடையை அவிழ்க்காமலே இருக்க முடியுமா? உங்கள் படுக்கையறையை வேவு பார்த்தவர்தான் அசிங்கமானவரே தவிர, அங்கு இயல்பாக இருந்த நீங்கள் அல்ல.

                இதிலும்கூட பெண்களின் நிர்வாணம் மிகவும் அவமானத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் மனிதர்கள் எனும்போது, எப்படி ஆணுடைய நிர்வாணத்திற்கு ஒன்றும், பெண்ணுடைய நிர்வாணத்திற்கு வேறாகவும் அவமானம் மாறுபட முடியும்? பொதுவாகவே ஆண் உள்ளாடை தெரியும்படி வேட்டி கட்டலாம். பெண்ணின் உள்ளாடை தவறிப்போய்த் தெரிந்தாலும் அது அசிங்கம் என்பதான மனநிலை இருக்கிறது அல்லவா, அதன் தொடர்ச்சிதான் இதுவும்!

               பிரச்சினை என்னவென்றால், பெண்ணை, ஆணைப்போன்றே ஒரு மனிதர் என்ற பார்வையுடன் பார்ப்பதில்லை என்பதுதான். மனிதனைத்தவிர வேறு எந்த மிருகமும், இனப்பெருக்கத்துக்காக இணைசேரும் நேரம் தவிர, பிற நேரங்களில், உடன் இருப்பது ஆணா பெண்ணா என்று பார்ப்பதேயில்லை என்று நான் அடிக்கடி கூறுவேன். ஆனால், மனிதன் மட்டுமே பெண்ணை, பெண்ணின் உடலாக மட்டுமே பார்க்கிறான். அதன் விளைவே, பெண்ணின் நிர்வாணம் அதிக அவமானத்துக்குரியது என்ற கருத்தாக்கம். அதுதான், சில ஆண்டுகளுக்குமுன் நிர்வாண உடலுடன் மார்ஃபிங் மூலம் தன் முகம் பொருத்தப்பட்டதற்காகவே சேலத்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்குக் கொண்டு சென்றது. அப்படியான படம் வெளியானதில் அந்த மாணவியின் தவறு ஏதாவது இருக்கிறதா? ஆனாலும், அவள் அசிங்கம் என்பது என்ன நியாயம்? பகுத்தறிவுள்ள எவராவது அதை ஏற்க முடியுமா?

               அப்படியானால் என்னதான் செய்வது? பொதுவாக, முன்பெல்லாம் கற்பழிப்பு என்ற சொல் புழக்கத்திலிருந்தபோது, 'என்ன அழிந்தது என்று காட்ட முடியுமா?', அதில் தொடர்புடைய இருவரில் ஒருவருக்கு மட்டும் ஒன்று(கற்பு) எப்படி அழிய முடியும்?' என்று நான் கேட்பேன். அப்படித்தான், ஒரு பெண்ணின் நிர்வாணப் படம் வெளியானதால் அந்தப் பெண்ணிற்கு என்ன குறைந்துவிடும்? ஒரு சமூகமாக நானும், நீங்களும் பார்க்கிற அசிங்கப்படுத்தும் பார்வையைத் தவிர வேறு எந்தக் குறையும் அந்தப் பெண்ணிற்கு உண்மையில் ஏற்படப் போவதில்லை. ஆனால், மானம் போய்விட்டது என்று அவளை நம்பச் செய்து, தற்கொலை வரை இட்டுச் செல்கிற நிலையிலிருப்பது, நாகரிகம் அடைந்த சமூகமா?

               'என் உடலை மூடும்படி உடை அணிகிற நான் நாகரிகமானவள்தான், அந்த உடையை நான் அகற்றும் தனிப்பட்ட இடங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அதைப் பார்க்கிறவரும், படமெடுக்கிறவரும், அதைப் பரப்புபவரும்தான் நாகரிகமற்றவர்கள், அப்படியான நாகரிகமற்றவர்களுக்காக நான் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை', என்ற உணர்வுதான் சரியான நாகரிக வளர்ச்சியாக இருக்க முடியும். அதையும் தாண்டி, அசிங்கமான பார்வைகளை யாராவது பார்த்தாலும், 'நீங்கள் அப்படங்களைப் பார்த்ததால் நான் எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை, ஆனால், என் தனிப்பட்ட இடங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்ததில் நீங்கள்தான் திருட்டுத்தனம் செய்பவர்களாக ஆகியிருக்கிறீர்கள், இது நீங்கள் கவலைப்படவேண்டிய செய்தியே தவிர, எனக்குக் கவலைப்பட ஏதுமில்லை', என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, நாயைப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டுக் கடந்துபோய், தன் பணிகளில் கவனம் செலுத்துவதுதான் தீர்வு. இந்தத் தன்னம்பிக்கையை நாம் சார்ந்த பெண்களுக்கு ஊட்டவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

               தாய்லாந்து செய்தியிலும்கூட, அரசருக்கு மனைவி இல்லை. இவர் காதலி என்பதை அவர் மறைக்கவில்லை. அதனால் அவர் நாகரிகமானவர்தான். ஆனால், அவர்களுடைய தனிப்பட்ட இடங்களில் திருட்டுத்தனமாக நுழைந்து, படமெடுத்து, பகிர்ந்தவர்கள்தான் அசிங்கத்துக்கு உரியவர்கள். அரசுரிமை மாதிரியான சிக்கல்கள் இருந்தால், அவற்றை அந்தத் தளத்தில் நேர்மையுடன் சந்திக்க வேண்டுமே தவிர, பெண்ணின் நிர்வாண உடலை ஆயுதமாக்குபவர்கள் எவரும் நாகரிகமடைந்த மனிதர்களாக இருக்கவே முடியாது என்பது அறிவுக்கடலின் கருத்து!


No comments:

Post a Comment