இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Monday, November 10, 2014

கெட்டிக்காரன் புளுகு!


கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். ஜன்தன் யோஜனாவுக்கும் அதே கதைதான்! ஏழ்மையை விரட்ட, நிதித் தீண்டாமையை விரட்ட என்றெல்லாம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாகச் சுமார் 7 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. ஏழ்மையை விரட்ட வந்த திட்டம், எனவே, 7 கோடிப்பேர் பணக்காரர்களாகி விட்டார்கள் என்றுதானே அர்த்தம்...? பணக்காரர்களாக வேண்டாம், ஏழைகளாக இல்லாமல் உயர்ந்திருக்கவாவது வேண்டுமே? அதெல்லாம் தெரியாது. ஆனால், திட்டத்தில் சேர்ந்து வங்கிக் கணக்குத் துவங்குபவர்களுக்கு இலவசக் காப்பீடு என்று அறிவிக்கப்பட்டதல்லவா, அது 5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இல்லை என்று மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. ஏன்?
அவர்கள் அந்த வங்கிக் கணக்கில் பணம் போடவில்லையாம்! ஏழ்மையை விரட்ட என்றால் ஏழைகளிடமிருந்துதான் விரட்ட வேண்டும். அப்படி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குத் துவங்கி விட்டுப் பணம் போடவில்லை என்றால்...? வங்கியில் போடப் பணம் இருந்தால் அவன் ஏன் ஏழையாக இருக்கிறான்?
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்கிறது ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீட்டை அளிக்க வேண்டிய எச்டிஎஃப்சி எர்கோ என்ற தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனம்! கணக்கில் பணம் போட்டால்தான் காப்பீடாம்! அதுவும், ஏதோ ஒருமுறை பணம் போட்டாலும் போதாதாம், விபத்து நடந்தால், அதற்கு முந்தைய 45 நாட்களில் கணக்கில் ஏதாவது பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் மட்டுமே காப்பீடு என்கிறது இந்நிறுவனம்! ஆக, கணக்குத் துவங்கிவிட்டோம், ஏழ்மையை விரட்டிவிட்டோம், இலவசக் காப்பீடுவேறு அளித்துவிட்டோம் என்பதெல்லாம் கெட்டிக்காரன் புளுகுதானே?
துவங்கப்பட்டுள்ள 7 கோடி வங்கிக் கணக்குகளில் 1.71 கோடி கணக்குகளில், தங்களிடம் இருந்த கொஞ்ச நஞ்சப் பணத்தையும் ஏழைகள் செலுத்திவிட்டனர். மீதமுள்ள 5 கோடியே சொச்சம் கணக்குகளுக்குத்தான் இந்தக் கதை! சரி... ஏதோ ரூ.5 ஆயிரம் மிகைப் பற்று என்றார்களே, அதை  பணம் செலுத்தாத இந்த ஏழைகள் எடுத்திருக்க முடியாதே, அதனால் கணக்கில் ரூ.5,000 இருப்பதாகக் கருதலாமே...? கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா... 6 மாதத்துக்கு கையில இருக்கிற எல்லாப் பணத்தையும் போட்டு எடுத்து திருப்திகரமா வரவு செலவு செஞ்சாத்தான் அந்த ரூ.5,000 கொடுக்கிறதப் பத்தி யோசிக்கவே செய்வாங்களாம்... அப்ப அதுவும் டுபாக்கூரா?
அவசரப் படாதீங்க, கொஞ்சநாள்ல இலவசக் காப்பீடு கொடுத்திடுவோம் என்கிறார் இந்திய தேசிய வழங்குதல்கள் கழகத்தின் (NPCI) நிர்வாக இயக்குனர் ஏ.பி.ஹோட்டா. எப்படி என்றால், இந்தக் கணக்குகள் துவங்கியதே, மானியங்களை ரொக்கமாக வழங்குவதற்காகத்தானே, அதனால், பல்வேறு மானியங்கள் இந்தக் கணக்குகளுக்கு வர ஆரம்பித்துவிடும், அப்புறம் வரவு செலவு தானா நடக்கும்ல என்கிறார். ஏற்கெனவே, 54 மாவட்டங்களில் முன்னோடியாக, ஆதார் எண் இல்லாதவர்களுக்கும் சமையல் எரிவாயுவுக்கான மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதா
ம்! ஆக, ஏழ்மை ஒழிப்பு, நிதித்தீண்டாமை மறுப்பு, இலவசக் காப்பீடு எல்லாம் தூண்டிலில் வைக்கப்பட்ட புழுக்களே... இறுதி இலக்கு, ரேசனை ஒழித்து, மானியத்தை ரொக்கமாக வழங்குவதே! இடையில் அரசுக்குக் கூடுதல் பலன், ஏழைகளிடமிருக்கும் கொஞ்ச நஞ்சப் பணத்தையும் வங்கிக்குக் கொண்டுவந்து, ஏதாவது ஒரு தனியார் முதலாளிக்கு, சிண்டிகேட் வங்கி கொடுத்ததுபோலக் கடனாகக் கொடுத்துவிட்டு, வராக்கடன் என்று ஏப்பம் விடுவது!
ஜன்தன் யோஜனாவின் நீலச்சாயம் வெளுத்துப்போச்சு... டும், டும், டும்!

திரைக்கதையும், காமெடி ட்ராக்கும்!


பொதுவாகத் திரைப்படங்களில் காமெடி ட்ராக் என்று ஒன்று இணைக்கப்படும். மிகவும் சீரியசான அழ வைக்கும் திரைக்கதையில்கூட காமெடி ட்ராக் என்று ஒன்று இருக்கும். (இன்றைய திரைப்படங்களில் படமே (காமெடிப் படங்கள் அல்ல...) காமெடியாகி, வெற்றிக்குத் தேவை குத்துப் பாட்டும் கவர்ச்சி நடனமும் என்றாகிவிட்டது தனிக் கதை...!)
கிட்டத்தட்ட மோடி அரசும் அவ்வாறான ஒரு உண்மையான திரைக்கதையும் தனித்தனி ட்ராக்குகளுமாகச் சென்று கொண்டிருக்கிறது! உண்மையான திரைக்கதை அந்நிய இந்திய பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தேவையானவற்றைச் செய்து, இந்தியாவை முழுமையாக விற்பது என்பது என்றாலும், எளிய மக்களை ஈர்க்க ஜன்தன் யோஜனா, மோடி கேர் என்பதான ட்ராக்குகளும், படித்த மேதாவி வர்க்கங்களை ஈர்க்க கிளீன் இந்தியா போன்ற ட்ராக்குகளுமாக வெற்றி நடை போடுகிறது!
அந்த வரிசையில் தற்போது "டெலிட் வாட்ஸ்ஆப்" சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது! வாட்ஸ்ஆப் என்பது ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படுகிற, இலவசமாகக் குறுஞ்செய்திகளையும் (நீண்ட நெடிய செய்திகளையும்கூட!), படங்களையும், வீடியோ முதலானவற்றையும் பகிர்ந்துகொள்ளும் மென்பொருள். இணையத்தைப் பயன்படுத்தும் இந்த மென்பொருள் முதலாண்டு இலவசமாகவும், அடுத்த ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணத்துடனும் செயல்படுகிறது. இந்த, ஆண்டுக்கு ஒரு டாலர் என்பதை ரூ.56 என்று கணக்கிட்டால், 20 கோடி இந்தியர்கள் பயன்படுத்துவதாகக் கொண்டால், அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.1120 கோடி செல்கிறது, சீனாகூட தனி மென்பொருள் வைத்துள்ளது, எனவே வாட்ஸ்ஆப்-ஐ அழியுங்கள் என்பதுதான் தற்போதைய முழக்கம்!
உண்மையில் வாட்ஸ்ஆப் இருப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழப்பைச் சந்திப்பதாகப் புலம்புவது உண்டு. ஏனெனில் எம்எம்எஸ் எனப்படும் மல்டிமீடியா மெசேஜ் மூலமாக மட்டுமே அனுப்பக்கூடிய பலவற்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பமுடிவதுடன், எம்எம்எஸ், எஸ்எம்எஸ் ஆகிவற்றைவிட வாட்ஸ்ஆப் பயன்படுத்துதற்கான இணைய இணைப்பிற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கட்டணம் குறைவு என்பதுமாகும்!
வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்குச் செல்லும் ஆண்டுக்கு ரூ.1120 கோடிதான் பெரிய செய்தி என்றால், இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீடுகளுக்கான லாபம்? இந்தியாவில் 2001-12 காலத்தில் வந்துள்ள அந்நிய முதலீடு (FIPB Route, RBI Automatic Route & Acquisition Route), இந்திய அரசின் தொழில் வர்த்தகத்துறை அமைச்சத்தின் புள்ளிவிபரங்களின்படி ரூ.10,24,812 கோடி. இந்த முதலீடு ஈட்டிய லாபத்திலிருந்து செய்யப்பட்ட மறு முதலீடு மட்டும் (அதே அமைச்சகத்தின் புள்ளிவிபரப்படி) ரூ.4,15,122 கோடி. இது லாபத்தில் ஒரு பகுதிதான்! அவர்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தொகை பற்றிய விபரம் இந்த தளத்தில் இல்லை! ஆயிரம் கோடி பெரியதா, 4 லட்சம் கோடி பெரியதா?
கேட்டால், அந்நிய முதலீடு இந்தியாவை வளர்க்க, வேலை வாய்ப்பை உருவாக்க வருகிறது என்பது அரசின் வாதம்! நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
ஆனால் இதே 2001-12 காலத்தில் இந்தியாவிலிருந்து, இந்தியப் பெரு முதலாளிகளால், கார்ப்பரேட் நிறுவனங்களால் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடு (CARE Ratings இணையதள தகவல்படி) ரூ.7,30,678 கோடி! அதாவது, இந்தியாவிற்கு வந்த அந்நிய முதலீட்டின் அளவில் 71.3% அளவிற்கு இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்கு முதலீடு சென்றுள்ளது! 2014 நிதியாண்டில்கூட, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற முதலீடுகள் ரூ.1,75,800 கோடி. இது எதற்காக அந்நிய நாடுகளுக்குச் சென்றது? அந்த நாடுகளை வளர்க்கவும், அங்கு வேலை வாய்ப்பை உருவாக்கவுமா? இந்தியா அந்நிய நாடுகளிடம் கையேந்தும்போது, இங்கு முதலீடு செய்யுமாறு வலிந்து அழைக்கும்போது, இங்கிருந்து முதலீடு வெளிநாட்டுக்குச் சென்றதேன்? லாபத்தைத் தவிர வேறு நோக்கம் இருக்க முடியுமா?
ஆனால், இந்தியாவுக்கு வருகிற அந்நிய முதலீட்டுக்கு ஆயிரத்தெட்டு சலுகைகள், வரி விடுமுறைகள், இன்னும் லாப உத்தரவாதம்கூட வழங்கப்படுகிறதே? உதாரணம் : நோக்கியா! நோக்கியா செய்த ரூ.1125 கோடி முதலீட்டுக்கு, வழங்கப்பட்ட சலுகைகள் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்குமேல்!
இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற முதலீடுகளுக்கு அதெல்லாம் வழங்கியிருந்தால் இங்கேயே இருந்திருக்காதா? வழங்கப்பட்டது என்பதற்கு உதாரணம் குஜராத்தில் அமைக்கப்பட்ட டாடா நானோ தொழிற்சாலை! ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு வழங்கிய உதவி ரூ.86 ஆயிரம் என்று சொல்லுமளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனாலும், அதிக லாபம் தேடி வெளிநாட்டுக்குச் செல்கிறது. எல்பிஜி மானியம் வாங்காதீர்கள், தேசப்பற்றுள்ள இந்தியர்களாக இருங்கள் என்று கூவுவதுபோல, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள், தேசப்பற்றுள்ள இந்தியராக இருங்கள் என்று அழைக்க மோடி அரசால் முடியாதா? அவற்றை இங்கேயே முதலீடு செய்ய வைத்தால், பாதுகாப்புத் துறையில், ரயில்வேயில் என்று சகல துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டிய அவசியமே வராதே?
அந்நிய முதலீட்டால் புதிய தொழில்நுட்பம் வரும் என்கிறது அரசு! தொழில்நுட்பம் தேவை என்ற வெற்றுக் குரலை, மங்கள்யான் அனுப்பியபிறகும் நம்பமுடிகிறதா? கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை எந்த நாடும் தர முன்வரவில்லையே? தரவில்லை என்றதும் நம்மால் உருவாக்க முடிந்ததே? வேறென்ன தொழில் நுட்பத்தைத் தரப்போகிறார்கள் என்று பாதுகாப்புத்துறையையே திறந்துவிடுகிறார் மோடி?
சீனா வாட்ஸ்ஆப் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். (வாட்ஸ்ஆப் சீனாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது தனிச் செய்தி!) சீனா ஜிமெயில் முதலானவற்றைத் தடை செய்துள்ளது என்பது பாதுகாப்புக் காரணங்களுக்காக. இங்கு எல்லாக் கதவையும் விரியத் திறந்துவிட்டு என்ன டெலிட் வாட்ஸ்ஆப்?
மோடி அரசின் உண்மையான திரைக்கதை மேட் இன் இந்தியா இல்லை. மேக் இன் இந்தியாவாக அவர்களால் முடிந்தது காமெடி ட்ராக்கும் குத்துப் பாடல்களும் மட்டுமே...!
உண்மையில், இங்கு முதலீட்டுக்கு நிதி இல்லாததால் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படவில்லை. அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் லாபம் சம்பாதிப்பதற்காக, சரியாகச் சொன்னால் ஆக்கிரமிப்பதற்காக மட்டுமே அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் எங்கு லாபம் கிடைக்குமோ அங்குதான் முதலீடு செய்யும். அவர்களுக்கு மேக் இன் இந்தியா எல்லாம் கிடையாது! இவர்களின் லாபத்திற்கு பொதுத்துறைகளை விற்பது, ரயில்வே முதலான துறைகளைத் திறந்து விடுவது, நிலக்கரி முதலான இயற்கை வளங்களை வாரிக்கொடுப்பது முதலான எல்லா வசதிகளையும் செய்து தருவதுதான் திரைக்கதையின் மெயின் ட்ராக். ஆனால், கிளீன் இந்தியா, டெலிட் வாட்ஸ்ஆப் முதலான காமெடி, கவர்ச்சி ட்ராக்குகள் மட்டுமே நமக்குச் சொல்லப்படுகின்றன. மெயின் ட்ராக்கை மக்களுக்கு விளக்கத் தவறினால் அய்ந்தாண்டு முடிவில் இந்தியா இருக்காது!

Saturday, November 1, 2014

எதுவுமே கிடைக்காட்டியும்... நாங்கள்லாம்...!

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று நண்பர்களிடையே, யாருடைய நாடு பழம்பெருமை வாய்ந்தது, யாருடைய நாட்டில் முன்னேறிய தொழில்நுட்பம் இருந்தது என்று விவாதம் எழுந்தது.
முதல் நண்பர் சொன்னார், "எங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின்போது, நீண்ட கம்பிகள் கிடைத்தன, அதனால் எங்கள் நாட்டில் அந்தக் காலத்திலேயே மின்சார வசதிகள் இருந்தன என்று முடிவுக்கு வந்தோம், எனவே எங்கள் நாடுதான் தொழில்நுட்பத்தில் முன்னோடி!"
அடுத்தவர் சொன்னார், "எங்கள் நாட்டில் பூமியைத் தோண்டியபோது, மெல்லிய கம்பிகள் கிடைத்தன, அதனால் அந்தக்காலத்திலேயே எங்கள் நாட்டில் தொலைபேசி வசதிகள் இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம், மின்சாரத்தைவிட தொலைபேசி மேம்பட்டது, எனவே, எங்கள் நாடுதான் அதிகத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தது...!"
இறுதியாக, மூன்றாவது நண்பர் சொன்னார், "எங்கள் நாட்டில் மண்ணுக்கடியிலிருந்து எதுவுமே கிடைக்கவில்லை, எனவே அந்தக் காலத்திலேயே எங்கள் நாட்டில் Advanced wireless communication systems இருந்திருக்கிறது, உங்கள் இருவரின் நாட்டைவிட எங்கள் நாடே முன்னேறியது........!!!!!!!!!"
வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியா மரபணு விஞ்ஞானத்திலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பேசியிருப்பதற்கும், இதற்கும் தொடர்பிருப்பதாக நீங்கள் எண்ணிக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல......

Wednesday, September 17, 2014

நமக்கு எப்போது வரும்?

ஏதாவது ஒரு ஊரின் ஏதாவது ஒரு சாலையின் ஏதாவது ஒரு சிக்னலில் நின்று பாருங்கள்...

>சிகப்பிலிருந்து பச்சை மாறியதும், சீறிச் செல்லும் வாகனங்கள்...
>முன்னுள்ள வாகனம் செல்லும்வரை பொறுமையின்றி, வழியிருந்தால், தடுப்பைத் தாண்டி வலதுபுறம் நுழைந்து போகும் வாகனங்கள்...
>பச்சை வரும்வரை பொறுமையின்றி இண்டு இடுக்குகளில் முன்னேறி, முன் வரிசைக்கு வரும் வாகனங்கள்...
>பச்சை மாறி சிகப்பே வந்து விட்டாலும், அதன்பின்னும் சில நொடிகளுக்குக் சீறும் வாகனங்கள்...
>அதற்குள் அடுத்த சாலையிலிருந்து சீறிய வாகனங்களுடன் மோதல் வேறு...
>இவர்கள் எல்லாம் நேரந்தவறாமையை முதன்மையாகக் கொண்டவர்களோ என்றென்னும் வகையில், சாலை விதிகளைத் துச்சமாக மதித்துப் பறக்கும் வாகனங்கள்...
>வழிவிடக் கோரி ஓயாமல் ஒலிக்கும் 'ஹார்ன்கள்'...

ஆனாலும் ஏன் 'இந்தியன் பங்ச்சுவாலிட்டி...'?

இவ்வளவு வேகமாகப் போயும், ஏன் இந்த நிலை?

வேகமாகச் செல்வது சரியான நேரத்திற்குச் செல்வதற்காக அல்ல!
சக மனிதனைவிடக் கொஞ்சமே கொஞ்சமாவது தனக்குக் கூடுதலாக வேண்டும்...
கியூவில் நிற்கும்போதுகூட, ஒரு ஆளை முந்தினாலும் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே...
அதுதான், சாலையில் போகும்போது, சிக்னலில் நிற்கும்போது...
எல்லாவற்றிலும், கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம்... முன்னால் போனால்தான் திருப்தி...
அதற்காக விதிகளை மீறலாம்... அடுத்தவருக்கு இடைஞ்சல் செய்யலாம்...
நாலு பேருக்கு நல்லதுன்னா...
அடச்சே,
நம்ம ஒருத்தருக்கு நல்லதுன்னா எத்தனை பேருக்கு வேணாலும், என்ன வேணாலும் செய்யலாம்...

'கொசுறு'க்கு ஆசைப்பட்டே, கோணலாக்கிவிட்டோம்... எல்லாவற்றையும்!

நமது நாட்டின் சட்டங்களை நாமே மதிக்காவிட்டால், மற்றவர்கள் எப்படி மதிப்பர்?
நமக்குரிய முறை வரும் என்ற பொறுமையும்,
நமது நாட்டின் சட்டங்களை நாம் மதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்
நமக்கு எப்போது வரும்?

Sunday, July 3, 2011

ஒப்பந்தமும் சொந்த-பந்தமும்!

தற்போது சகலத்துக்கும் கான்ட்ராக்டர்கள் வந்துவிட்டார்கள். கல்யாணம், காது குத்து முதல் சிறு சிறு விழாக்கள் வரை ஆதியோடு அந்தமாய் அனைத்தையும் செய்து தருகிறார்கள். கூட்டுக்குடும்ப முறை காணாமல் போய் தனிக்குடித்தனங்களாக அகிவிட்ட நிலையில் வெறும் பெற்றோரும் பிள்ளைகளுமாய் உள்ள குடும்பங்கள் தனியே வைபவங்களை நடத்துவது இயலாத செயலாகிவிட்டது. பணிபுரியும் நிறுவனத்துக்குத்தக வெளியூரிலும் குடியேறிவிடுவதால் சொந்த பந்தங்களும் விசேசங்களில் முழுமையாக துணைக்கு நிற்க முடியாமல் போய்விடுகிறது. அக்காலங்களில் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையே குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில்தான் இருக்கும். எனவே 'இது நம்ம வீட்டுக் கல்யாணம்' என்று பொறுப்புக்களில் பங்கேற்க மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா என்று பட்டாளமே இருக்கும். இப்போதுதான் அவர்களெல்லாம் தூரத்து உறவுகளாகிவிட்டார்களே!

குடும்பத்தினரே வேலைகளைப் பங்கிட்டு செய்துவிடும்போது செலவு மிகவும் குறைவு என்பது சொல்ல வேண்டியதில்லை. அது மட்டுமல்ல, நம் சொந்த வேலை என்ற அக்கறையும் இருக்கும்.

தமிழகம் ஒன்றும் ஆளில்லாத சிறிய குடும்பம் அல்ல. வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் லட்சக்கணக்கில்! எனவே எந்த வேலைக்கும் கான்ட்ராக்டர்களைத் தேடிக்போகும் அவசியம் இல்லை. தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் குறிப்பிட்டப்பட்ட இலவசப் பொருட்களை வழங்க தமிழக அரசு தீவிர முயற்சிகளைத் துவக்குவதாக அறிவிப்புக்கள் வெளியானவுடனேயே, ரூ.2000க்குள் கிரைண்டர் தர உற்பத்தியாளர்கள் தயார் என்று அறிவிக்கிறார்கள். ஒரு கிரைண்டர் வாங்குவதென்றால் கடையில் வாங்குவது சரி. கோடிக்கணக்கில் தேவைப்படும்போது? வீட்டில் இத்தனைப் பேர் வேலையின்றி உள்ளபோது விலைகொடுத்து வாங்குவது சிக்கனமாக இருக்குமா? எந்த உற்பத்தியாளராவது லாபம் இன்றி எதையாவது உற்பத்தி செய்து விற்பாரா? மேலும் ஒப்பந்தங்கள் என்றால் இடையில் கமிசனும் வந்துவிடுமே? ஒரு மன்னன் செய்வது முழுமையாக மக்களுக்கு சென்றடையவி;ல்லை என்பதை பனிக்கட்டியை வழங்கச்செய்து கடைசியில் மக்களிடம் சேரும்போது நீரே மிஞ்சியதை விளக்கிய அமைச்சரின் கதை நமக்குத்தெரியும். தற்போது தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களின் நிலையும் அவ்வாறு ஆகிவிடாமல் அரசு செலவிடும் ஒவ்வொரு காசுக்கும் உரிய மதிப்புள்ள பொருட்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு அரசே நிறுவனங்களைத் துவக்கி தமிழக இளைஞர்களுக்கு வேலையும் அளித்து, மக்களுக்கு இலவசமானாலும் தரமான பொருட்களைத் தரவேண்டும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? முதலில் நிதியாதாரம் வேண்டும். நிச்சயமாக விலை கொடுத்து வாங்கத் தயாராகிவிட்டபிறகு, அந்த நிதியை நாமே உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது என்பதில் ஒன்றும் புதிதாக நிதியாதாரம் தேவைப்படப்போவதில்லை. மேலும் உற்பத்தியாளர்களும் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் உற்பத்தி செய்ய அரசின் ஒப்பந்தத்தைக்காட்டி வங்கிகளிடமே நிதி உதவி பெறப்போகிறார்கள். தனியார் உற்பத்தியாளர்களுக்கே அது சாத்தியமென்றால் அரசுக்கு சாத்தியமில்லையா?

இந்தத் தொழிற்சாலையெல்லாம் அரசு நடத்த முடியுமா? எந்தத்துறையிலும் அரசால் முடியாததது என்று ஒன்று இருக்கவே முடியாது. தொழிலாளர்களோடு சேர்த்து அந்தத்துறையின் நல்ல தொழில்நுட்ப வல்லுனர்கள் ஓரிருவரையும் பணிக்கு அமர்த்துவதுடன், சுவரன்சிங் மாதிரியான பொறுப்பான, மக்கள்நலன்மீது அக்கறை உள்ள அய்.ஏ.எஸ். அதிகாரிகளை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பொறுப்பாக நியமிக்க வேண்டும். தனியாரால் செய்ய முடிவது அரசால் செய்ய முடியாமல் போய்விடுமா என்ன?

எல்லோருக்கும் கொடுத்தபின் தொழிற்சாலையை என்ன செய்வது? அரசு அறிவித்துள்ளபடி தகுதிபெறும் அனைவருக்கும் வழங்குவது ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ சாத்தியமானதல்ல. அதற்கே நீண்ட நாட்கள் ஆகும். அத்துடன் கடந்த ஆட்சியின் இலவசத் தொலைக்காட்சிபோல குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவசம் என்று அறிவிக்கவில்லை. எனவே பொருளின் தரம் நன்றாக இருந்தால் மற்றவர்களும் இதையே வாங்கத் துவங்கிவிடுவார்களே? ஒரு காலத்தில் தமிழக அரசு நிறுவனத்தின் தயாரிப்பான சியர்ஸ் எல்காட் தொலைக்காட்சி சக்கைப் போடு போடவில்லையா? நிர்வாகச் சீர்கேடு இல்லாமல் பார்த்துக்கொள்வதுடன், புதிய தொழில்நுட்பங்களையும் அவ்வப்போது உள்வாங்கிக் கொண்டால் நிறுவனத்துக்கு என்றுமே வெற்றிதான்!

அத்துடன் என்ன மறைத்துப் பேசினாலும் 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பதுபோல ஒப்பந்தங்கள் கமிசனின்றி அசையாது. தனியார் தயாரிப்பாளர்கள் தங்கள் லாபம் போக அந்தக் கமிசனுக்கும் சேர்த்து பொருளின் தரத்தைக் குறைத்துத்தான் உற்பத்தி செய்வார்கள். எனவே அரசே நிறுவனங்களைத் துவக்கினால் வாங்கித் தருவதைவிட சிறந்த பொருட்களை மக்களுக்குத் தர முடியும்.

இவை எல்லாவற்குக்கும் மேலாக, சில ஆயிரம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். சில ஆயிரம் சிறுதொழில் முனைவோருக்கு அரசு நிறுவனத்துக்கு உதிரிப் பொருட்கள் வழங்கும் வேலை கிடைக்கும். அந்தக் குடும்பங்களுக்கு ஒளியேற்றிய பெருமை தமிழக முதல்வருக்குக் கிடைக்கும்.

மேலும் கலைவாணர் ஒரு படத்தில் கிழிந்த ரூபாய் நோட்டு இத்தனைப் பேரின் தேவையை சரிசெய்தது என்று ஒரு நிகழ்ச்சியைக் காட்டியிருப்பார். அதாவது செலவிடப்படும் பணம் பொருளாதாரத்தில் அடுக்கடுக்கான பலமடங்கு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பெரு முதலாளிகளுக்கு அடிப்படைத் தேவைகளுக்காகச் செலவிடவேண்டிய நிலை இல்லை, எனவே தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே செலவிடுவார்கள். ஆனால் தமிழக இளைஞர்களுக்கு புதிதாக வேலையளித்தால் அவர்கள் அதில் பெரும்பகுதியைத் தங்கள் வாழ்க்கைக்காக அவ்வப்போது செலவிடுவார்கள். இது தமிழக அரசுக்கே அவர்களின் தொழில் வரி, அவர்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களிலிருந்தும் வரிகள் என்று பல்வேறு விதமான வரிகளாக வருமான உயர்வு தருவதுடன், தமிழகத்தின் பொருளாதாரத்தையும் பலமடங்கு உயர்த்தும்.

எனவே தமிழக அரசு வழங்கப்போகும் இலவசப் பொருட்களுக்கு ஒப்பந்தங்களை நாடாமல், அனைத்திற்கும் அரசே நிறுவனங்கள் துவங்கி சொந்த பந்தங்களாம் நம் இளைஞர்களுக்கு வேலையளிக்க வேண்டும் என்பது பணிவான கோரிக்கை!